தமிள் படிச்ச அளகு - கி.ரா

குற்றாலத்தில்ஒரு நாள், ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பார்க்க ஒருத்தர் வந்தார்.

வந்தவர் செந்தமிழில் எங்களிடம் "அய்யா அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகச்" சென்னார்.

அவர் பேசுகிற விதமே அப்படி என்று தெரிந்தது.ரசிகமணி அவர்கள் இதை ரெம்ப அனுபவிப்பார்கள் என்று எங்களுக்குக் குஷி!

அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டோம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சுத்தமான தமிழில் வெளுத்து வாங்கினார் மன்னன்.

ஆ....ஹா என்பது போலத் தலையை ஆட்டி, மீசைக்குள்ளேயே சிரித்துக் கொண்டு ரசித்துகொண்டு ரசிகமணி அவர்கள் " ரசித்த" விதம், எங்களுக்கு அனுபவிக்கும் படியாக இருந்தது! வந்தவர் பேசி முடிந்ததும் ரெம்ப குளுமையா, " வீட்ல சம்சாரத்துட்டயும் இப்படித்தான் பேசுவீளோ?" என்று கேட்டார்கள் ரசிகமணி! டி.கே.சி. சிரிக்காமல் கேட்டுவிட்டார். எங்களுக்குச் சிரிப்பை அடக்கப் பிரயாசைப்பட வேண்டியதிருந்தது.

இடைச்செவலுக்கு வந்த பிறகும் அந்தக் "காட்சி", ரசிகமணி அவர்கள் கேட்ட ஞாயமான கேள்வி மனசில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதை கு.அழகிரிசாமியின் மாமனாரான சந்திரகிரியிடம் அப்படியே - குற்றாலத்தில் நடந்ததைச் சொன்னேன். உடனே அவர் என்னிடம் ஒரு நாட்டுக்கதையைச் சொன்னார்.

ஒரு ஊரில், அளகு என்ற பையனை வெளியூருக்குத் தமிழ் படிக்கப் பண்டிதரிடம் அனுப்பினார்கள். அவன் ரெம்ப நாள் தமிழ் படித்து முடித்துவிட்டு ஊருக்கு வந்தான். அம்மா அப்பாவைப் பார்த்ததும், "அன்னாய், தாதாய்" என்றான் மகிழ்ச்சியுடன், பெற்றவர்களுக்கு "திக்" கென்றது!

"என்ன சொல்லுகிறான் பயல்" என்று திகைத்தார்கள்,"ஏலே அளகு, என்ன சொல்லுதே?" என்று கேட்டார்கள். திரும்பவும் அவன் அதே தோரணையில் " அன்னாய் தாதாய்" என்று சொல்லிவிட்டு "அயிற்சி மிக்கது, அடிசில் புக்கி, சிறிதே அயனம் கொணர்க" என்றான்.

பெத்த தகப்பன் பதறித்தான் போனான்!

"அட பாவிப் பயலே! ஒன்னே தமிள் படிக்கதான்லே அனுப்ச்சோம்; நீ என்ன பாசையெல்லாமோ போசுதயே!"

அந்த ஊருக்குப் பக்கத்தில் எப்பவோ ஒரு லாட சன்யாசியை கொள்ளைக்காரர்கள் வழிப்பறி செய்து கொன்று போட்டுவிட்டார்கள். தொலைதூர வடநாட்டிலிருந்து வந்த அந்த லாட சன்யாசி போயாக மாறி யாரையாவது பிடிப்பான். அந்த லாட சன்னாசிப் பேய் பிடித்த ஆள் பேசுவது இப்படித்தான் யாருக்கும் விளங்காது, தங்கள் பிள்ளைக்கும் அதே பேய்தான் - தனியாக நடந்து வந்தபோது - பிடித்துவிட்டது என்று வருத்தப் பட்டார்கள்.

போய்களுக்கு எருக்கம் மிளாரு கொண்டு வந்து நாளு சாத்து சாத்தினால் " போறேன் போறேன்" என்று அலறிக் கொண்டு போய்விடும். ஆகையால், எருக்கம் மிளாறு கொண்டு வரச் சொன்னார்கள்.

ஊரே கூடிவிட்டது, எல்லாருக்கும் வருத்தம் தான், " ஆசயாய்ப் படிக்கப் போன பிள்ளையை, இப்படி பேய் வந்து பிடித்து ஆட்டுகிறதே" என்று,

ரெம்ப தூரத்திலிருந்து நடந்தே வந்த பையன்; பசிகூட அமத்த முடியலையே என்று அம்மாவுக்கு வருத்தம். காலையிலிருந்து மத்தியானம் வரை அவன் கதவைத் தட்டித் தட்டி " அன்னாய் தாதாய், அன்னாய் தாதாய்" என்று அழைத்து அழைத்து அழுத்துப் போனான்.

பொழுது இறங்கியது. பசி பிராணன் போனது. அவனை அறியாமலேயே சத்தம் போட்டான் இப்படி " ஆத்தோவ் வகுறு பசிக்கி, கஞ்சி ஊத்து" - மாறி மாறி சொன்னான் பலமாக!

பெற்றவ்ர்களின் காதில் தேன் வந்து பாய்வது போல இருந்தது. பையனை எருக்கம் மிளாரினால் அடிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சந்தோஷம் அவர்களுக்கு, " நம்ம பெரியாட்கள் செய்த புண்ணியம், நம்ம பையனுக்குத் திரும்பவும் நல்லா பேச வந்திட்டது", என்று சொல்லி ஆறுதல் அடைந்தார்களாம்.


புத்தகம் : கரிசல் காட்டுக் கடுதாசி.
ஆசிரியர் : கி.ராஜநாரயணன்.
பதிப்பகம்: அகரம்.



அன்புடன்...
சரவணன்

கலித்தொகை - 5.நல்லந்துவனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).
2. கபிலர் (குறிஞ்சி)
3. மருதனிளிநாகனார்(மருதம்)
4.சோழன் நல்லுருத்திரன் (முல்லை).


5. நல்லந்துவனார் (மருதம்).


இவர் நெய்தற்கலியைப் பாடியுள்ளார். மருதக்கலியினை பாடிய மருதனிளிநாகனார் தமது அகநானுறூற்றுப் பாடல்களுள் ஒன்றில்(அகம் 59) நல்லந்துவனாரைத் "தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை இன்றீம் பைஞ்சுனை" எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இவரை மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்று உயர்த்திக் கூறியுள்ளனர்.சங்ககாலத்தில் மதுரை ஆசிரியர் என்று புகழப் பெற்றோர் மிகச் சிலரே. நக்கீரனாரின் நந்தை கணக்காயனார் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.(கணக்காயர் - ஆசிரியர்).


நல்லந்துவனார் இயற்றிய நெய்தற்கலிப் பாடல்கள் மிக பொருட்செறிவு வாய்ந்தவை. பாடலில் இவர் ஆளும் சொற்களோடு இடை இடையே சொற்களையும் தொடர்களையும் பெய்து கொண்டு பொருள் உணருமாறு பாடியுள்ளார். இவரது இப்புலமைத் திறத்தைக் கலித்தொகையின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

"சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்".

என்பதனால் சொல்லெச்சமும், குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார் - என்று குறிப்பிட்டுப் பாராட்டுகின்றார். தமது அரிய உரையில் அத்தகைய செய்யுள்களை நன்கு விளக்கிக் காட்டுகின்றார்.


நல்லந்துவனார் செய்தற்கலி தவிர அகநானுற்றில் 1 பாடலும், நற்றிணையில் 1 பாடலும், பரிபாடலில் 4 பாடல்களும் பாடியுள்ளார். பாடற்பணி மட்டுமின்றி சங்கப் பாடல்களைத் தொகுக்கும் பணியையும் மேற்கொண்டு கலித்தொகையைத் தொகுத்து அளித்தவரும் இப்புலவர் பெருமகனேயாவார். இந்நூலுக்கு இவர் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். ஏனைய சங்கத்தொகை நூல்களுக்கெல்லாம் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினர். அஃது ஆராய்ச்சிகுரியது.

இவர் கலித்தொகை தொகுத்த செய்தியினை,

"நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் துணைபுலவோர் - தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காம் கலியினையே
கூட்டினான் ஞாலத்தோர்க் கு"

என்ற பாடல் தெரிவிக்கின்றது.

இவர் கலித்தொகையுள் திணைகளைத் தொல்காப்பியர் கூறும் வரிசை முறையிலன்றி, பிரிவைப் பற்றிய பாலைத் திணை, கூடலைக் குறித்த குறிஞ்சித்திணை, ஊடலை உணர்த்தும் மருதத்திணை, இருத்தலைப் பற்றிய முல்லைத்திணை, இரங்கலை எடுத்துரைக்கும் நெய்தல் திணை என வரிசைப் படுத்தியுள்ளார்.

இவர் நெய்தற் திணைக்குரிய சிறுபொழுதாகிய ஏற்பாடு(மாலை)பற்றியும், அதனோடு இயைபு பற்றி இரவுப் பொழுது பற்றியும் பொழுது வருணனையாகப் பாடிய செய்திகள் அழகியன.

அவற்றுள்"நாள் முழுதும் ஓயாது அலையெறியும் கடல்கூட நடுயாமத்தில் அலையடங்கி அமைதி அடைகிறது" என்று கற்பனை செய்து அவ்யாம நேரம்வரை பூஞ்சோலைகளில் வண்டுகள் இசைபாட, இவ்விசையொலியைக் கேட்டுக் கடல் கண்ணயர்ந்து துயில் கொள்கின்றது எனப் பாடுகின்றார். அதற்குச் சிறந்த ஓர் உவமையும் அமைக்கின்றார். பரமத்தில் திருமால் நாரதர் தும்புரு முதலியோரின் யாழிசை கேட்டுத் துயில்வதைப் போல அக்காட்சி இருந்தது என்கின்றார்.

"கரும்பார்க்கும் குரலினோடு இருந்தும்பி யியைபூத
ஒருங்குடன் இம்மென இமிர்தலிற் பாடலோடு
அரும்பொருள் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போல்
பெருங்கடல் துயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்"

என்பவை இவரது கற்பனைச் சித்திரத்தைத் தாங்கியுள்ள அடிகளாகும்.

தோழி தலைவனை வரைவுகடாவும் துறையில் இவர் அமைக்கும் நெய்தற்கலிப்பாடல் அறநெறிகளை வரிசைப்படுத்திக் கூறும் அழகு எண்ணி மகிழத்தகுந்தது. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளையும் சேர்ந்த இன்றியமையத நெறிகள் சிலவற்றை இதில் வரிசைப்படுத்தியுள்ளார்.

ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்.(ஆற்றல் - இல்வாழ்க்கை நடத்துதல்) என்று அறநெறியையும்,போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்று இன்ப நெறியையும் முறையெனப் படுவது கண்ணோடது உயிர் வெளவல் என்று பொருள் நெறியையும் இவர் எடுத்துக் காட்டுதலை என்றும் நினைவு கூர்ந்து மகிழலாம். இவ்வடிகள் முதலியவை திருக்குறள் கருத்துக்களை அடியொற்றி நிற்பது கருதத்தக்கது.


இத்துடன் சங்க இலக்கியம் கலித்தொகை - பாடினோர் வரலாறு - நிறைவு பெறுகின்றது.


அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை - 4. சோழன் நல்லுருத்திரன்(முல்லை)

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).
2. கபிலர் (குறிஞ்சி)
3. மருதனிளிநாகனார்(மருதம்


4. சோழன் நல்லுருத்திரன் (முல்லை).

இவர் முல்லைக் கலியினைப் பாடியுள்ளார். இதைத்தவிரப் புறநாறுற்றில் பொருள்மொழிக் காஞ்சித்துறை பற்றி ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதில் சிறு அளவினதாகிய கதிர்களை வயலில் தன் பல்லினால் கடித்தெடுத்து வளையில் சேர்க்கும் எலியைப் போல் அற்பமுயற்சி செய்யும் ஆடவரைப் போல அல்லாமல், உரிய இரை கிடைக்கவில்லை எனில் பசித்துக்கிடந்து காட்டுப் பன்றி எதிர்ப்படும் போது அதனை அடித்துக் கொன்று உண்ணும் புலியைப் போலப் பெருமுயற்சி செய்யும் ஆடவரின் ஊக்கத்தைப் பாராட்டுகின்றார்.

இப்புலவர் சோழமன்னர் குடியினைச் சார்ந்தவர் என்பது இவரது பெயருக்குரிய அடைமொழியால் புலப்படுகின்றது. இவர் காலத்தில் சோழநாடு பாண்டிய மன்னரின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய சிற்றரசாக இருந்தது போலும். அதனால்தான் மருதக்கலியின் பாடல்கலில் பாண்டியனின் மேலாண்மையைச் சிறப்பித்துப் பாடுகின்றார். அவற்றுள் சிறந்த பா

டலாக அறிஞர்கள் எடுத்துக் காட்டும் "மலிதிரை ஊர்ந்து" எனத் தொடங்கும்
கலிப்பாவில்,

"மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"

என்று பாண்டிய மன்னனின் மேலாண்மையைப் புலப்படுத்துகின்றார். மற்றொரு பாடலில் பாண்டியனை "எம்கோ வாழியார்" என் வாழ்த்துகின்றார். ஏறுதழுவி வென்ற ஆடவரைக் காதலித்து மணந்த செய்தியையும் சிறப்பித்துப் பாடுகின்றார். இவர் முல்லைக் கலியில் முல்லைத்திணை ஒழுக்கமாகிய இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்பதைப் பாடுதலை விட முல்லை நிலத்து ஆயர் குடியினரின் வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதலையும் ஆயர் மகளிர் வீரமில்லாத ஆடவரை இப்பெண்டிர் தம் நெஞ்சில் இருந்தார் என்பதை இவர் எடுத்துக் கூறும்,

"கொல்லேற்றுக் கோடாஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்"

என்னும் அடிகள் புலவர் உலகின் சிந்தைக் கவர்ந்தவையாகும்.


அடுத்து....

5. நல்லந்துவனார்


அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை 3. மருதனிளநாகனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை)
2. கபிலர் (குறிஞ்சி).


3. மருதனிளநாகனார்.


இவர் மருதக்கலியைப் பாடியுள்ளார். இதைத் தவிர அகநானூற்றில் 22 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும், புறநானுற்றில் முறையே பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி, பாண்டியன் இலவந்திகைபள்ளித்துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பற்றியும், பொதுவாகவும் 4 பாடல்களும் பாடியுள்ளார்.

மருதக்கலியில் மருததிணையின் உரிப்பபொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பது பற்றியப் பாட எடுத்துக் கொண்டு மகளிரின் மெல்லிய மனம் ஆடவரின் பரத்தமை ஒழுக்கத்தால் எவ்வாறெல்லாம் வருந்துகிறது என்பதையும் அதனால் அவர்கள் உரிமையோடு தம் கணவரிடம் போராடுவதையும் நயமாக எடுத்துக் கூறியும், இடித்துக் காட்டியும் அவர்களைத் திருத்தும் மாண்பினையும் விரிவாகப் பாடியுள்ளார்.

அத்தகைய மாண்புடைய பெண்டிருள் ஒருத்தி தனது கோபம் தீர்வதற்க்குரிய காரணமாக,

"விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கவிந்து ஒழியும் என் புலவி"

என்று கூறுவது விருந்தெதிர் கோடல், மக்களை வளர்த்தல் முதலிய குடும்பக் கடமைகளை, தனது காதலை விடச் சிறந்தவாகக் கருதும் அவளது குணமான்பினைப் புலப்படுத்துகின்றது.


அடுத்து....

4. சோழன் நல்லுருத்திரன்(முல்லை)

அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை 2. கபிலர் (குறிஞ்சி).

கபிலர்


சங்க இலக்கியப் படல்களுள் மிக அதிகமான எண்ணிகையுள்ள பாடல்களைப் பாடிய கபிலர் கலித்தொகையில் குறிஞ்சிக் கலியினைப் பாடியுள்ளார்.இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் கலித்தொகையில் குறிஞ்சித்திணை பற்றிப் பாடியது மட்டுமன்றிப் பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றியே நூறு பாடல்களையும் பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார். எனவே குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறாலாம்.

இவர் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார்.அவன்பால் மட்டுமின்றி அவனது புறம்புமலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது வாழ்க்கை பாரிவேளின் நட்பில் பெரிதும் பிணைந்திருந்தது. அவனது இறப்புக்காக பெரிதும் வருதமுற்றதோடு அவனுடைய மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலப்படுத்தினார் என்பர். இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தார் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்ப் புராணம் கூறும்.இவரைப் "புலனகற்ற அந்தணாளன்"என மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டிக் கூறுகின்றார்.

இவர் இயற்றிய பாடல்களுல் மிகச் சிறந்து விளங்குவது பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனைத் தமிழ் அறிவித்தற்க்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் பூக்களையும்,சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அகப்பொருள் திணைகளுள் தமது மனம் கவர்ந்த குறிஞ்சித் திணையின் துறைகளுள் சிறந்ததாகிய அறத்தொடு நிற்றல் என்னும் துறை பற்றித் தோழியின் கூற்றாக இப்பாட்டினை அமைத்துள்ளார். இதில் வரும்,

"முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்;
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்"

என்னும் அடிகள் ஒழுக்கத்தின் விழுப்பத்தி3னை எடுத்துக்காட்டுவனவாகும்.

இவைபோல் குறிஞ்சிக் கலியிலும் இவர் மாந்தரின் உயர் பண்புகள் பலவற்றை வற்புறுத்துவதோடு பெண்டிரின் கற்புத் திறத்தையும் அதன் வலிமையால் அவர் தம் கணவன்மார்க்கு ஆற்றல் பெருகுவதையும் தோழியின் கூற்றாக வரும் ஒரு பாடலில் தெரிவிக்கின்றார்.

"காந்தல் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதுஎழலால்,தம் ஐயரும்
தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்"

என்பவை அவ்வடிகளாகும்.

பாரிவேள் மறைந்த பின்னர் இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடிச் சேரமான் செல்வங்கடுன்கோ வாழியாதனிடம் நூறாயிரம் காணமும் அவன் நன்றா என்னும் மலை மீது ஏறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றார்.சங்ககாலப் புலவர்கள் பலரும் இவரைப் புகழ்ந்து கூறியுள்ளனர்.

பதினோராம் திருமுறையில் சில நூல்களைப் பாடிய கபில தேவநாயனார் என்பவர் பிற்காலத்தைச் சேர்ந்த வேறொரு புலவர் பெருமகனார் ஆவார்.


அடுத்து : 3.மருதனிளநாகனார்.



அன்புடன்...
சரவணன்.

கலித்தொகை -1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).

பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும் கலித்தொகையை எடுத்துள்ளேன்.
"சங்க இலக்கியம்-கலித்தொகை" இந்த உரையின் ஆசிரியர் முனைவர்.சுப.அண்ணாமலை.
நான் படித்தவற்றை அப்படியே உங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்!
கலித்தொகை மொத்தம் 5 பெரும் புலவர்களால் பாடப்ப்பட்டுள்ளது! அவர்களைப் பற்றிய குறிப்புகள்.

1.பாலைபாடிய பெருங்கடுன்கோ (பாலை).
2.கபிலர் (குறிஞ்சி).
3.மருதனிளநாகனார் (மருதம்).
4.சோழன் நல்லுருத்திரன்(முல்லை).
5.நல்லந்துவனார்.


கலித்தொகை

பாடினோர் வரலாறு

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ!
கலித்தொகையில் முதற்ப் பகுதியாகிய பாலைக் கலியை பாடிய இவர் சேரவெந்தருள் ஒருவர். இவர் பெயர் "சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ"எனவும் வழங்கும். அகப்பொருள் திணைகளுள்"பிரிதலும் பிரிதல் நிமித்தமும்"என்னும் உரிப்பொருளை உடைய பாலைத் திணையைப் பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவர் ஆதலின்,"பெருங்கடுங்கோ"என்ற தமது இயற்ப் பெயருக்கு அடைமொழியாகப் "பாலைப் பாடிய" என்னும் சிறப்புத் தொடரைச் சேர்க்கப் பெற்றார்.

பாலைத் திணையில் இவர் பாடிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் பாலை நிலத்தின் கொடிய வெம்மையை மிக்க பொருத்தமான உவமைகள் வாயிலாக எடுத்துக் காட்டுகின்றார்.

வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வன்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள் வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்;

என்ற இவரது வருணனை நிலத்தின் கொடுமையை மட்டுமின்றி வறுமைத் துன்பம், சிறியார் செல்வத்தின் பயனின்மை,அகந்தை கொண்டோரின் அழிவு,கொடுங்கோல் அரசின் கீழ்வாழும் குடிமக்களின் அல்லல் ஆகியவற்றையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இங்குத் தாம் பாடிய மன்னனைப் போல அன்றி, இவர் கொடைப் பண்பும், வீரமும் உடைய நல்லரசராக விளங்கினார். புறநானுற்றில் இவரைப் பாடிய போய்மகள் இளவேயினி என்னும்சான்றோர் இவர் பாணருக்குப் பொற்றாமரையும், பாடினிக்குப் பொன்னரி மாலையும் பரிசாக வழங்கியமையைப் புகழ்கின்றார்.
இந்நல்லிசைச் சான்றோர் பாலைத் திணையைப் பற்றி மட்டுமே அகநானுற்றில் 12 பாடல்களும் குறுந்தொகையில் 10 பாடல்களும் நற்றிணையில் 10 பாடல்களும் பாடியுள்ளார்.புறநானுற்றில் இவர் பாடியதாக அடிகள் சிதைந்துள்ள பாடல் ஒன்று கிடைத்துள்ளது.


அடுத்து: 2.கபிலர்.

அன்புடன்...
சரவணன்.

அட பாவிப் பயலே -கி.ரா

நாடகங்களில் மனதைப் பறி கொடுத்து, மனம் ஒன்றிப் பார்ப்பவர்கள் நடந்து கொள்ளும் 'நாடக"த்தை நாம் அறிவோம்.ராமாயாணக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரர் சீதையை ராவணன் தூக்கிக் கொண்டு போய் விட்டான் என்று கேட்டதும், சீதையை மீட்க உடனே படையை திரட்டும் படி உத்தரவிட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

அரிச்சந்திரன் நாடகத்தில் நட்சத்திர ஐயன், அரிச்சந்திரனை வாட்டி எடுக்கும் கொடுமையைப் பார்த்த கிராமவாசி ஒருவர் கொதித்தெழுந்து, "சிறுக்கி மகனே, நானும் அப்போதே முதல் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கொடுமை செய்கிறத்துக்கும் ஒரு எல்லை வேண்டாமா? இங்கே என்ன, ஒருத்தரும் இல்லை என்ற நினைப்பா? விடு அவனை, இப்போ என்ன செய்கிறேன் பார்" என்று கம்பை எடுத்துக் கொண்டு அடிக்க ஓங்க, எல்லோரும் அந்தப் பட்டிக்காட்டு விவசாயியை(??!) சமாதானப்படுத்தினார்களாம்: "ஐயா, இது நிஜம் இல்லை; நாடகம்" என்று!

ஆனானப்பட்ட குலசேகராழ்வாருக்கே'அந்தக் கதி' என்றால், சாமானியர்கள் எந்த மட்டு!

இப்படித்தான் எங்கள் ஊரில் ரெம்ப நாளைக்கு முன்னால் ராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. பரதன் ராமனிடமிருந்து பாதுகைகளை வாங்கிக் கொண்டான். அப்போழுது ஒரு கிழவர் உனர்ச்சிவசப்பட்டு,பரதனைப் பார்த்துக் கீழ்கண்டவாறு சொன்னார்:"அட பாவிப் பயலே, அதையும் பிடிங்கிக் கொண்டாயா? அது ஒண்ணுதான் அவனிடமிருந்தது.காட்டில் கல்லிலே, முள்ளிலே நடந்து திரியப் போட்டுக்கொள்ள வைத்திருந்ததையும் எடுத்துக் கொண்டான் பார்?"

ராமன் பேரிலிருக்கும் அதீதமான பிரியத்தினால், கைகேயியின் மேலுள்ள வெறுப்பு, அவருக்குப் பரதன் எப்பேர்ப்பட்ட உத்தமன் என்பதைக்கூட உணர முடியாமல் செய்து விட்டது!
"அட பாவிப் பயலே, அதையும் பிடுங்கிக் கொண்டாயா...!" என்று அலறி விட்டார்.


-ஆனந்த விகடன்.
06-08-1961


(கி.ராஜநாராயணன் கட்டுரைகள்)


அன்புடன்...
சரவணன்.

இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை!

தமிழில் கட்டுரை எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை அதன் ஆரம்பமாக எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் காட்டுரையை முதலில் எழுதுகிறேன்.

ஸ்ரீமான் மொஹன்தாஸ் கரம்சந்த் காந்தி( மாகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் "நவஜீவன்" என்ற பத்திரிக்கையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிரார்.
அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின்வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வயது----------மணம்புரிந்த மாதர்-------கைம்பெண்கள்
0-1-------------13212--------------------1014
1-2-------------17753--------------------856
2-3-------------49787--------------------1807
3-4-------------134105-------------------9273
4-5-------------302425-------------------17703
5-10------------2219778------------------94240
10-15-----------10087024------------------223320
இந்த கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகும் முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின் தொகை 1,014. மற்றும்15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3.5 லட்சம்.இவர்களில் சற்றுக்குறைய 18000 பேர் 5 வயதுக்குட்பட்டோர்:
இப்படிபட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர்."இக் கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது.இதைப் படிக்கும் போது எந்த மனிதனுடைய மனமும் இளகிவிடும்(இந்நாட்டில்) விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?"என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
இந்த வியாக்கியானம் மீது மகாத்மா காந்தி பாத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி"மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்"என்கிறார்.அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின் சுருக்கம் யாதெனில்
(1) பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும்
(2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனை விவாகம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமேயாகும்.

(நன்றி...மகாகவி பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பிரசுரம்,செப்டம்பர் 1977.)



அன்புடன்...
சரவணன்.