கலித்தொகை - 5.நல்லந்துவனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).
2. கபிலர் (குறிஞ்சி)
3. மருதனிளிநாகனார்(மருதம்)
4.சோழன் நல்லுருத்திரன் (முல்லை).


5. நல்லந்துவனார் (மருதம்).


இவர் நெய்தற்கலியைப் பாடியுள்ளார். மருதக்கலியினை பாடிய மருதனிளிநாகனார் தமது அகநானுறூற்றுப் பாடல்களுள் ஒன்றில்(அகம் 59) நல்லந்துவனாரைத் "தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை இன்றீம் பைஞ்சுனை" எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இவரை மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் என்று உயர்த்திக் கூறியுள்ளனர்.சங்ககாலத்தில் மதுரை ஆசிரியர் என்று புகழப் பெற்றோர் மிகச் சிலரே. நக்கீரனாரின் நந்தை கணக்காயனார் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.(கணக்காயர் - ஆசிரியர்).


நல்லந்துவனார் இயற்றிய நெய்தற்கலிப் பாடல்கள் மிக பொருட்செறிவு வாய்ந்தவை. பாடலில் இவர் ஆளும் சொற்களோடு இடை இடையே சொற்களையும் தொடர்களையும் பெய்து கொண்டு பொருள் உணருமாறு பாடியுள்ளார். இவரது இப்புலமைத் திறத்தைக் கலித்தொகையின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்,

"சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்".

என்பதனால் சொல்லெச்சமும், குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார் - என்று குறிப்பிட்டுப் பாராட்டுகின்றார். தமது அரிய உரையில் அத்தகைய செய்யுள்களை நன்கு விளக்கிக் காட்டுகின்றார்.


நல்லந்துவனார் செய்தற்கலி தவிர அகநானுற்றில் 1 பாடலும், நற்றிணையில் 1 பாடலும், பரிபாடலில் 4 பாடல்களும் பாடியுள்ளார். பாடற்பணி மட்டுமின்றி சங்கப் பாடல்களைத் தொகுக்கும் பணியையும் மேற்கொண்டு கலித்தொகையைத் தொகுத்து அளித்தவரும் இப்புலவர் பெருமகனேயாவார். இந்நூலுக்கு இவர் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். ஏனைய சங்கத்தொகை நூல்களுக்கெல்லாம் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடினர். அஃது ஆராய்ச்சிகுரியது.

இவர் கலித்தொகை தொகுத்த செய்தியினை,

"நாடும் பொருள்சான்ற நல்லந் துவனாசான்
சூடுபிறைச் சொக்கன் துணைபுலவோர் - தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காம் கலியினையே
கூட்டினான் ஞாலத்தோர்க் கு"

என்ற பாடல் தெரிவிக்கின்றது.

இவர் கலித்தொகையுள் திணைகளைத் தொல்காப்பியர் கூறும் வரிசை முறையிலன்றி, பிரிவைப் பற்றிய பாலைத் திணை, கூடலைக் குறித்த குறிஞ்சித்திணை, ஊடலை உணர்த்தும் மருதத்திணை, இருத்தலைப் பற்றிய முல்லைத்திணை, இரங்கலை எடுத்துரைக்கும் நெய்தல் திணை என வரிசைப் படுத்தியுள்ளார்.

இவர் நெய்தற் திணைக்குரிய சிறுபொழுதாகிய ஏற்பாடு(மாலை)பற்றியும், அதனோடு இயைபு பற்றி இரவுப் பொழுது பற்றியும் பொழுது வருணனையாகப் பாடிய செய்திகள் அழகியன.

அவற்றுள்"நாள் முழுதும் ஓயாது அலையெறியும் கடல்கூட நடுயாமத்தில் அலையடங்கி அமைதி அடைகிறது" என்று கற்பனை செய்து அவ்யாம நேரம்வரை பூஞ்சோலைகளில் வண்டுகள் இசைபாட, இவ்விசையொலியைக் கேட்டுக் கடல் கண்ணயர்ந்து துயில் கொள்கின்றது எனப் பாடுகின்றார். அதற்குச் சிறந்த ஓர் உவமையும் அமைக்கின்றார். பரமத்தில் திருமால் நாரதர் தும்புரு முதலியோரின் யாழிசை கேட்டுத் துயில்வதைப் போல அக்காட்சி இருந்தது என்கின்றார்.

"கரும்பார்க்கும் குரலினோடு இருந்தும்பி யியைபூத
ஒருங்குடன் இம்மென இமிர்தலிற் பாடலோடு
அரும்பொருள் மரபின்மால் யாழ்கேளாக் கிடந்தான்போல்
பெருங்கடல் துயில்கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்"

என்பவை இவரது கற்பனைச் சித்திரத்தைத் தாங்கியுள்ள அடிகளாகும்.

தோழி தலைவனை வரைவுகடாவும் துறையில் இவர் அமைக்கும் நெய்தற்கலிப்பாடல் அறநெறிகளை வரிசைப்படுத்திக் கூறும் அழகு எண்ணி மகிழத்தகுந்தது. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளையும் சேர்ந்த இன்றியமையத நெறிகள் சிலவற்றை இதில் வரிசைப்படுத்தியுள்ளார்.

ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்.(ஆற்றல் - இல்வாழ்க்கை நடத்துதல்) என்று அறநெறியையும்,போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்று இன்ப நெறியையும் முறையெனப் படுவது கண்ணோடது உயிர் வெளவல் என்று பொருள் நெறியையும் இவர் எடுத்துக் காட்டுதலை என்றும் நினைவு கூர்ந்து மகிழலாம். இவ்வடிகள் முதலியவை திருக்குறள் கருத்துக்களை அடியொற்றி நிற்பது கருதத்தக்கது.


இத்துடன் சங்க இலக்கியம் கலித்தொகை - பாடினோர் வரலாறு - நிறைவு பெறுகின்றது.


அன்புடன்...
சரவணன்.

2 பிட்னூட்டங்கள்:

said...

கலித்தொகைக்கு நல்லதொரு அறிமுகம் தந்தீர்கள் சரவணன். மிக்க நன்றி.

நல்லந்துவனாரின் பாடலில் திருமாலைப் பற்றியும் அவன் கடல்கிடந்ததைப் பற்றியும் உள்ள குறிப்புகளை அறிந்து மகிழ்ந்தேன். மாயவனாம் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்ற என் எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல் இருக்கிறது இந்த செய்தி. சங்க நூல்களை ஆய்ந்து குமரக்கடவுளைப் போற்றும் இடங்களை எப்படி ஆன்றோர்கள் எடுத்துச் சொன்னார்களோ அது போல் கண்ணனைப் பற்றிய சங்க நூல் குறிப்புகளையும் ஆய்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டு. இறைவனின் அருள் எப்போது கிடைத்து நேரம் அமைந்து அது நடக்கிறதோ.

said...

சரவணா.. பள்ளிக்கொடம் படிக்கையிலே புரிஞ்சதில்லை.. ம்ம்ம்... இப்போ மட்டும் நான் என்னத்தச் சொல்ல...